இதற்குத் தேவையானது :
எலுமிச்சம் பழம் 10
சிவப்பு மிளகாய் உங்கள் ருசிக்கேற்ப
வெந்தயம் இரண்டு டீ ஸ்பூன் .
உப்பு ருசிக்கேற்ப
மஞ்சள் தூள் 3 டீ ஸ்பூன் .
எண்ணெய் சிறிதளவு( மிளகாய், வெந்தயம் ,வறுக்க)
எலுமிச்சம் பழத்தை படத்தில் தெரிவது போல் நறுக்கிக் கொள்ளவும்.
நீங்கள் இன்னும் சிறிதாகவோ, கொஞ்சம் பெரிதாகவோ விருப்பத்திற்கேற்ப
நறுக்கிக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில், இந்த எலுமிச்சை துண்டுகளில் சிலவற்றை இரண்டு விரல்களால் லேசாகப் பிழிந்த மாதிரி போடவும். அப்பொழுது தான் நீங்கள் உப்பு போடும் போது , உப்பு சீக்கிரம் கரையும்.
பிறகு உப்பும், மஞ்சள் தூளும் அதில் போட்டு, கரண்டியால் நன்கு கலந்து விட்டு , அப்படியே மூடி வைக்கவும். தினம் ஒரு முறை பாத்திரத்தை நன்கு குலுக்கி விட்டு மூடி வைக்கவும். இதே மாதிரி தினமும் குலுக்கி, ஒரு வாரத்திற்கு வைத்திருக்கவும். வேண்டுமானால் வெயிலில் ஒரு சில மணி நேரம் வைக்கலாம். (ஆனால் கட்டாயமில்லை .)
ஒரு வாரம் கழித்து ,ஒரு ஸ்பூனால் அமுக்கிப் பார்த்தால் நன்கு அமுங்கும்.எலுமிச்சை சாறு தெரியும் .( மேலே படத்தில் உள்ளது போல்)
இந்த சமயத்தில், வெந்தயம், மிளகாய் இரண்டையும் எண்ணெயில் வறுத்து
மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை எலுமிச்சங்காய் மேல் தூவி கரண்டியால் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ருசித்துப் பார்த்து , தேவைப்பட்டால் உப்பும், இன்னும் கொஞ்சம் மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். உப்பு கொஞ்சம் தூக்கலாக இருப்பது நலம். நாள் பட உப்பின் சுவை தெரியாது. மேலும் உப்பு குறைவாக இருந்தால் ஊறுகாய் கெட்டு விடும் வாய்ப்புண்டு.
எலுமிச்சை ஊறுகாய் ரெடி !!!
இதை கண்ணாடி பாட்டிலில் அல்லது பீங்கான் ஜாடியில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
பிளாஸ்டிக் பாட்டிலகளைத் தவிப்போமே!
புற்று நோயை விரட்டுவோமே!