Friday, October 17, 2014

கம்பு கிச்சடி

கம்பு  சிறு தானிய வகையை சேர்ந்தது. டையாபிடிக் நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவு. கம்பு வேக வைப்பதற்கு சற்றே அதிக நேரம் ஆகும். ஆனால் சமைத்த பின் சுவையோ அலாதி தான்.






கம்பு ரவையாகக்  கிடைத்தால்   அதையே பயன் படுத்திக் கொள்ளலாம்.
கம்பு ரவையாகக் கிடைக்கவில்லை என்றால் நாமே ரவையாக்கிக் கொள்ளலாம்.  கம்பை நன்கு  தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு(ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை)  , மிக்சியில் போட்டு உடைத்துக் கொள்ளலாம். ரவையாகி விடும்.


கம்பு ரவை


 கம்பு கிச்சடி செய்யத் தேவையானவை:

  1. கம்பு ரவை ---1 கப் 
  2. உருளைக்கிழங்கு ( விருப்பப்பட்டால்) --  1 .
  3. கேரட்--1.
  4. பச்சைப் பட்டாணி --சிறிது.
  5. பெரிய வெங்காயம்---  1 அல்லது 2   
  6. தக்காளி---1.
  7. பச்சை மிளகாய்--1/2 ( விருப்பத்திற்கேற்ப)
  8. கடுகு -- 1 ஸ்புன் 
  9. உளுத்தம்பருப்பு --1 ஸ்புன்.
  10. எண்ணெய் --- 1 ஸ்புன்   (தாளிக்க) .
  11. உப்பு----தேவைக்கேற்ப 
  12. கறிவேப்பிலை-சிறிது.


செய்முறை :

வெங்காயம், பச்சைமிளகாய்,  தக்காளி, காய் வகைகள் எல்லாவற்றையும் அரிந்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய்  ஊற்றி, காய்ந்தது , கடுகு, உ.பருப்புப் போட்டு சிவந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை , காய் போட்டு லேசாக வதக்கவும். பிறகு அதிலேயே கம்பு ரவையைப் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டவும். கம்பு வறுபட்டதும் வாசனை  வரும். கம்பின் பச்சை வாசனை  போய் விடும். அப்பொழுது கேசை நிறுத்தி விடலாம்.

வதக்கியதை பாத்திரத்தில் போட்டு,  மூன்றரைக் கப் தண்ணீர்   (ஒரு கப் கம்பிற்கு, மூன்று கப் தண்ணீரும், காய்கறிக்கு அரை கப்)  விடவும். உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி விட்டு, பாத்திரத்தைக் குக்கரில் வைத்து  ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை  வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.

குக்கர் ஆறிய பின் எடுத்து கரண்டியால் நன்கு கலந்து விட்டு சூடாகப் பரிமாறவும். சட்னி/ சாம்பார்  தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.  தயிருடன் சாப்பிட சுவை கூடும் .