Saturday, January 31, 2015

முருங்கைக் கீரைப் பொடி

கீரை வகைகளிலேயே முருங்கைக் கீரைக்குத்  தனி மகத்துவம் உண்டு . ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றக் கீரை என்றுக் கூட சொல்லலாம். இணையத்தைத் துழாவினால்  இந்தக் கீரையின்  மகத்துவம் புரியும்.

சர்க்கரை வியாதியும், ரத்தக் கொதிப்பும்  முருங்கைக் கீரையின் முன் மண்டியிடும் என்று  மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. ஆனாலும் எல்லாக் கீரையைப் போல் இது சரளமாகக் கிடைப்பதில்லை.கிடைக்கும் போதும் வாங்கி, முருங்கைக் கீரையைக் கூட்டு செய்வது  வழக்கம்.  ஆனால் முருங்கைக் கீரையைப் பொடியாக செய்து வைத்துக் கொண்டால் தினமும் முருங்கைக் கீரை ஒரு ஸ்பூனாவது சேர்க்கும்  வாய்ப்புக் கிடைக்கும்.

எப்படி செய்வது பார்க்கலாமா?


         

 அதற்குத் தேவையானவை

  1.  தனியா ஒரு டம்ளர்.
  2.  சிவப்பு  மிளகாய்  ஒன்று அல்லது இரண்டு ( உங்கள் காரத்திற்கேற்பக்  கூட்டவோ, குறைக்கவோ  செய்யலாம்)
  3. பெருங்காயம் சிறிது.
  4.  முருங்கைக் கீரை  சுமார் இரண்டுக் கைப்பிடியளவு.( விரும்பினால் அதிகமாக்கிக் கொள்ளலாம்)
  5.  உப்பு தேவைக்கேற்ப .
  6.  எண்ணெய்  (வறுப்பதற்கு) ஒரு டீ ஸ்பூன் .

முருங்கைக் கீரையை  ஆய்ந்து , நன்கு சுத்தம் செய்து விட்டு,  நிழலில் நான்கைந்து நாட்களுக்கு உலர்த்தி  எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

வாணலில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு பெருங்காயம், மிளகாய், தனியா  எல்லாவற்றையும் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெறும் வாணலியில் உலர்ந்த முருங்கைக் கீரையைப்  போட்டு ( சில வினாடிகள் மட்டுமே) லேசாக வறுத்துக் கொள்ளவும்.

மிக்சியில் வறுத்த மிளகாய், தனியா , பெருங்காயம், உப்பு  போட்டு நன்குப் பொடி செய்துக் கொள்ளவும். அதனுடன் முருங்கைக் கீரையைப் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.


பொடியை எடுத்துப் பாட்டிலில்  வைத்துக் கொள்ளவும். சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.

பி.கு : தனியாவிற்குப் பதிலாக  துவரம் பருப்புப்  போட்டும்  முருங்கைக் கீரைப் பொடி செய்யலாம். 
தனியா வாசனைத் தூக்கலாக இருப்பதால், சற்றே  சுவைக் கூடுதலாக  இருக்கும் என்பது என்  அபிப்பிராயம்.

உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிந்துக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்.