பாகற்காய் கசக்கும் ,எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் இனிப்பு கலந்து செய்து கொடுப்போமே. எல்லோருக்கும் பிடிக்கும் பாருங்கள்.
தேவையானவை
பாகற்காய் -- கால் கிலோ.
புளி ஒரு நெல்லிக்காயளவு.
மஞ்சள் பொடி. கால் ஸ்பூன் .
சாம்பார் பொடி உங்கள் ருசிக்கேற்ப .
தேங்காய் 2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப .
வெல்லம் சிறிதளவு (இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் உடைத்த வெல்லம்)
வறுக்க, தாளிக்க சிறிதளவு எண்ணெய்.
தாளிக்க கடுகு.
கறிவேப்பிலை,கொத்தமல்லி சிறிது.
வறுத்து அரைக்க :
பெருங்காயம் சிறிது.
தனியா இரண்டு டீஸ்பூன்
கடலை பருப்பு இரண்டு டி ஸ்பூன்.
ப.அரிசி இரண்டு டீஸ்பூன் .
சிவப்பு மிளகாய் இரண்டு அல்லது மூன்று .
செய்முறை
பாகற்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணயை வானலியில் ஊற்றி , எண்ணெய் காய்ந்ததும், பெருங்காயம் , போட்டு வறுத்து எடுக்கவும் . பின் அரிசி, கடலைபருப்பு, தனியா ,மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறின பிறகு மிக்சியில் போட்டு தேங்காயையும் சேர்த்து , கொஞ்சமாய் தண்ணீர் விட்டு ,விழுதாக அரைத்து வைக்கவும்.விழுதை ரொம்பவும் நைசாக அரைக்க வேண்டாம். ரொம்பவும் நைசாக அரைத்து விட்டால் , பிட்ல 'கொழ கொழ 'என்றாகி விடும். கவனம் . முக்கால் வாசி அரைபட்டால் போதும் . அதற்காக ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைக்க வேண்டாம்.
புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள பாகற்காய் இரண்டையும் போட்டு சிறிது நேரம் வதக்கவும். இரண்டு நிமிடங்கள் பிறகு ஊற வைத்த புளியைக் கரைத்து , பாகற்காயில் ஊற்றவும். புளி கரைசல் சற்றே நீர்க்க இருத்தல் நலம்.
இப்பொழுது மஞ்சள் பொடி, மிளகாய் பொடி உப்பு எல்லாம் போடவும். சாம்பார் பொடி போடும் போது, நீங்கள் அரைத்து வைத்திருப்பதில் மிளகாயும் சேர்ந்திருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து மூடி விடவும். சிறிது நேரம் கழித்து பாகற்காய் வெந்தவுடன்,
அரைத்து வைத்த விழுதை , அதில் சேர்க்கவும்.. ஒரு கொதி வந்தவுடன் ,
வெல்லத்தைப் போட்டு கரைந்தவுடன் இறக்கி வைக்கவும்.
ருசி பார்க்கவும். வெல்லம், காரம் ,உப்பு வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.அரைத்த விழுதைப் போட்டு அதிக நேரம் கொதித்தால் கொத்சு போல் ஆகிவிடும்.
கொத்தமல்லி தூவி ,சுடசுட பரிமாறுங்கள். சாதத்தில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம்.
பரிமாறும் போது அன்பையும், பாசத்தையும் அளவில்லாமல் போட்டுப் பரிமாறுங்கள். ருசி தூக்கலாக இருக்க நான் கியாரண்டி.